செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 241 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதற்கமைய 241 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 240 அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்து எடுக்கப்பட்ட 232ஆவது எலும்புக்கூட்டு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாதங்களுக்குப் பின்னர், 2026 ஏப்ரல் 27, அன்று, யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியது. அகழ்வாய்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாளான, 29 ஏப்ரல் அன்று, அகழ்வு தளத்தில் கறுப்பு நிற மண் துகள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன
அகழ்ந்து எடுக்கப்பட்ட கறுப்பு நிற மண்ணை ஆராய்ந்தபோது அதில் ஒரு நாணயக்குற்றி கண்டெடுக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
அகழ்வாய்வுத் தளம் இரண்டில் மீட்கப்படாத மனித எலும்புக்கூடு அந்த இடத்திலேயே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவிக்கின்றார்.
