யாழ் போதனா வைத்தியசாலையில் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று சனிக்கிழமை (9) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து வைத்தியசாலைக்கு சென்ற வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட பின்னர், பணிப்பாளருடன் நிலைமைகளை கேட்டறிந்த போதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு மாற்றியமை மற்றும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து பணிப்பாளர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
