கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதாரப் பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, அங்கு சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் 65 முதல் 80 வரையான நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடுமையான காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, இம்முறை பரவி வருவது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) எனப்படும் எபோலா வைரஸ் வகையாகும்.
இந்த நோய்க்காக இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் இல்லாததால், இதன் பரவலைக் கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
மேலும், இந்த நோய் அருகிலுள்ள உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால், அதனைத் தடுப்பதற்கான தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
