நாட்டில் பெரிய வெங்காய விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், விசேட விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அநுராதபுரம் – நாச்சதூவ விவசாயக் குடியேற்றப் பகுதியை, பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவைப்பாடானது 03 இலட்சத்து 25,000 மெற்றிக் டொன்னாக காணப்படும் போதிலும், உள்நாட்டில் தற்போது 50,000 மெற்றிக் டொன் வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், நடப்பு வருடத்திற்குள் உள்நாட்டு வெங்காய உற்பத்தியை 70,000 மெற்றிக் டொன் வரை அதிகரிப்பதே இந்த விசேட திட்டத்தின் பிரதான இலக்காகும் என விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தரமான பெரிய வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், விதைகளை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளுக்குச் செலுத்தப்படும் பெருமளவிலான செலவீனங்களைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசேட திட்டத்தின் அங்குரார்ப்பண உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார மேலும் தெரிவித்துள்ளார்.
