இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிப்பதற்கும், மேற்கு இந்தியாவுடனான வான்வழித் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக, இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையே எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி முதல் புதிய நேரடி விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் தனியார் விமானச் சேவை நிறுவனமான ஃபிட்ஸ்எயார் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் தனது விமானச் சேவைகளை இயக்கவுள்ளது. இதன் மூலம், ஏனைய நகரங்கள் ஊடாக இதுவரை 9 மணித்தியாலங்களாகக் காணப்பட்ட பயண நேரம், இனி வெறும் 3 மணித்தியாலங்களாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலா சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்து சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் அமைப்பின் பிரதிநிதி கமல் முனசிங்க ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டில் மாத்திரம் இந்தியாவில் இருந்து சுமார் 500,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஏனைய முக்கிய நகரங்களில் இருந்து நேரடி வான்வழித் தொடர்புகள் ஏற்கனவே காணப்பட்ட போதிலும், குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரம் இதுவரை இலங்கை சுற்றுலாத்துறையால் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு பெரும் சந்தையாகக் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
