ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்படும் கோழிக்கழிவுகளை சிறிய லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று, மகாவலி ஆற்றில் கலக்கும் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டியதற்காக, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் நேற்று (29) இரவு இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் .
குறித்த சந்தேகநபர்கள் கோழிக்கழிவுகளை லொறியில் ஏற்றிக்கொண்டு ஹட்டன் – கொழும்பு பழைய வீதி வழியாக இரு முக்கிய நீரோடைகளின் சங்கமமாகும் மகாவலி ஆற்றின் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டவிருந்தபோது, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களைக் பின்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், லொறியையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஹட்டன் நகரில் கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு சில லொறிகள் இவ்வாறு நீரோடைகளில் கொட்டுவதாகவும் இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வந்தன் காரணமாக பொலிஸார் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
