தமிழ் நாட்டில் நேற்று (9) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு, சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காண்பிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான காணொளியில் பல எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்
“பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வில், ஒளிபரப்பப்பட்ட காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் உள்ள இக்காலத்தில், சில நிமிட காணொளியைக் கூட பிழையின்றி தயாரிக்க முடியாதது அரசுத் துறைகளின் அலட்சியத்தையே காட்டுகிறது.
காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னதாக அது பரிசீலிக்கப்பட்டதா அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றி வரும் வேளையில், தமிழ்நாட்டிலேயே தாய்மொழியில் ஒரு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியமை வருத்தத்திற்குரியது என வானதி சீனிவாசன் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
