மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு, முதலமைச்சர் விஜய் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், கிராமிய சினிமாவின் முன்னோடியாகவும் போற்றப்பட்ட பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிராஜாவின் கலைப் பங்களிப்புகளையும், தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது X தளப் பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளதாவது,
“தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் மகத்தான பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
