பாதுக்கை மடுலுவாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் ஒலிப்பதிவு அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் மற்றும் ஒலிப்பதிவு உபகரணங்களை திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பாதுக்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விகாரையில் பணியாற்றும் தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனையடுத்து மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பாதுக்கை, வட்டரேகை, ஜயமுத்துகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஆவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட பொருட்களை மற்றொருவரிடம் விற்பனை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் திருடப்பட்ட அனைத்து ஒலிப்பதிவு உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர் “ஐஸ்” எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து குறித்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
