வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் தனியார் தாதியர் கல்லூரியில் ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றியதாகக் கூறப்படும் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் தாதியர் கற்கைநெறிகளுக்காக மாணவர்கள் பதிவு செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கற்கைநெறி நிறைவடைந்த பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாகியும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சான்றிதழ்களை உடனடியாக வழங்குமாறோ அல்லது செலுத்திய பணத்தை மீள வழங்குமாறோ மாணவர்கள் கோரிய நிலையில், திருப்திகரமான பதில் வழங்கப்படாததால் குழப்பநிலை உருவானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், கல்லூரியில் பணியாற்றியதாகக் கூறப்படும் ஐவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
