இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீடுகள் வந்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த முதலீடுகளில் மரினா ஹோட்டல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பிரைம் மெல்வா போர்ட் சிட்டி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் மூன்று அபிவிருத்தி திட்டங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால், இந்த நகரத்திற்கு முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சகம் கூறுகிறது.
முதலீடுகளை எளிதாக்கும் நோக்கில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் வழங்கும் “ஒற்றை சாளரம்” (single window) முதலீட்டு வசதி முறையை செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் தொழில் தொடங்குவதற்காக பல அரசு நிறுவனங்களில் அலைந்து திரியும் அவசியம் முதலீட்டாளர்களுக்கு இல்லாமல், தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், விரைவு முதலீட்டு வசதி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட நபர்களாக ஏழு நாட்களுக்குள் பதிவு செய்யப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளக்கூடியதாகவும், அவசர தேவைகளுக்கு உட்பட்டு ஐந்து வேலை நாட்களுக்குள் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாக்கள் அனுமதிக்கப்படக்கூடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
