கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயல்பாட்டு காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடர்புடைய அரச அறிவித்தலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் 2010 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் சொத்துகளை தவறாக பயன்படுத்துதல் போன்ற விடயங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் இந்த ஆணைக்குழு செயல்பட ஆரம்பித்தது.
இக் குழுவின் ஆரம்ப கால அவகாசம் இன்று (29) நிறைவடைய இருந்த நிலையில், அதன் பணிகளை முழுமையாக நிறைவு செய்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நேரத்தை வழங்கும் வகையில் காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணி பியசேன ரணசிங்க அவர்கள் செயல்படுகின்றார்.
மேலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கணக்காய்வு சேவையின் (தரம் 1) ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
