பொசன் பௌர்ணமி தினத்தில் மாலம்பே நகரில் நடைபெற்ற தானசாலை ஒன்றின் அருகில், இளைஞர் ஒருவரை சிலர் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கைகளாலும் கால்களாலும் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் மாலபே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 17 வயதுடைய, பட்டியவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மாலபே நகரில் நடைபெற்ற இலவச தானசாலையில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வரிசைக்கு வெளியே இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் சேர முயன்றுள்ளனர். அப்போது, அந்த இளைஞர் அவர்கள் வரிசையின் பின்புறத்தில் சேருமாறு அறிவுறுத்தியதே இத் தாக்குதலுக்கான முக்கிய காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மாலம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
