களுத்துறை, கட்டுக்குருந்தை பகுதியில் காலி–கொழும்பு பிரதான வீதியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 62 வயதுடைய பெண்ணும் 12 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, களுத்துறை கட்டுக்குருந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பேருந்தின் முன்பகுதியில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்திருந்தனர். படுகாயமடைந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியை உயிரிழந்த சிறுவனின் தாத்தா செலுத்தியிருந்ததாகவும், அவரும் பலத்த காயங்களுடன் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மற்றொரு பெண் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுத்துறை துவே பன்சல வீதி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பேருவளை பகுதியில் நடைபெற்ற பொசோன் சிறி நிகழ்வைக் கண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
