யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அர்ச்சுனா இராமநாதன், அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவையிலிருந்து முறையாக விலகாமல், வேட்பு மனு சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாகப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதனை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் திகதி அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சட்டத்தரணி எந்தவித ஆட்சேபனைகளையும் மன்றில் முன்வைக்கவில்லை.
அதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
