கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயராம வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய சோதனையில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் விசேட செயல்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06) இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, கடவத்த – சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணிடமிருந்து 52 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 156 கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
