மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகள், இரத்தினபுரி தலைமை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினரால் இன்று (7) கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தினபுரி நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறைப் பரிசோதகர் ருவன் தர்மபால தெரிவித்தார்.
வாகன உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் தவிர்ந்த, வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவதோ அல்லது அவற்றை எரிகலவையாக்கி வாகனங்களை இயக்குவதோ முற்றிலும் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்ணெண்ணெய் மூலமாகவோ அல்லது டீசலுடன் மண்ணெண்ணெய்யைக் கலந்தோ வாகனங்களை இயக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையானது மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக காவல்துறைப் பரிசோதகர் குறிப்பிட்டார்.
அத்துடன், இவ்வாறான பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது உடனடியாகத் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதுடன், விபத்துக்கள் ஏதும் நேராத சந்தர்ப்பங்களிலும் கூட திடீரெனத் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சோதனையின் போது, மலைப்பாங்கான பாதைகளில் பயணிக்கும் பல பேருந்துகளின் டயர்கள் தேய்வடைந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி, அவ்வாறான பேருந்துகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
