வவுனியா வடக்கு பிரதேச சபையினால் நெடுங்கேணி தெற்கு பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த திட்டம் சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 13.65 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய இடம் கிராமத்தின் பிரதான வீதி முகப்பு, பேருந்து தரிப்பிடம் மற்றும் மக்கள் பயன்பாட்டுப் பகுதியை பாதிக்கும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் தடைகள் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதற்குப் பதிலாக, போதுமான பரப்பளவு கொண்ட மாற்று இடத்தில் வணிக வளாகத்தை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ள மக்கள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

