நேட்டோ உச்சி மாநாடு துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, மூன்று முக்கிய நாடுகளுடன் புதிய ஆளில்லா விமான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
டென்மார்க், எஸ்தோனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உக்ரைன் இதுவரை மொத்தம் 9 நாடுகளுடன் இத்தகைய ‘ ஆளில்லா விமான ஒப்பந்தங்களை’ நிறைவு செய்துள்ளது.
கூட்டுப் பாதுகாப்பு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம், உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஆயுத ஏற்றுமதியில் வெளிப்படைத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதே இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, அந்த நாட்டில் ஆளில்லா விமானங்கள் தயாரிப்புத் துறை மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
ஆனால், தற்போது போர்க்கள அனுபவங்கள் மூலம் மிக நவீன ஆளில்லா வானூர்தி தயாரிப்புத் துறையை உக்ரைன் கட்டியெழுப்பியுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப அறிவை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உக்ரைன் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையின் அடையாளமாகவும் திகழும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
குறிப்பாக, டென்மார்க்குடனான ஒப்பந்தம், உக்ரைனில் போர்க்களத்தில் சோதிக்கப்பட்ட ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளுடன் இத்தகைய தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம், உக்ரைன் தனது தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கிய பங்காளியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
