கொழும்பு பகுதியில் சிறுவர்களுக்கான காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் உரிமம் பெற்ற மருந்தாளர்கள் இன்றி மருந்தகங்களை நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மூன்று மருந்தக உரிமையாளர்களுக்கும், மருந்தாளர் ஒருவருக்கும் மாளிகாகந்த மேலதிக நீதவானால் சுமார் 250,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) பிரதம உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் நெவில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மருதானை, கொழும்பு 15 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளில் உள்ள மருந்தகங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தல், மருந்தாளர்கள் அல்லது முறையான உரிமங்கள் இன்றி மருந்தகங்களை நடத்துதல், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி மருந்துகளை வழங்குதல், பதிவு செய்யப்படாத மருந்துகளைக் களஞ்சியப்படுத்துதல் மற்றும் மருத்துவர்களுக்கான மாதிரி மருந்துகளை (Samples) வைத்திருந்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த விதிமுறை மீறல்களின் கீழ் நான்கு வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
