இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய கடலட்டைகளுடன் 26 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 60, 448 கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 26 கடற்றொழிலாளர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
