சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க, முதன்முறையாக மிகப் பெரிய மத்திய உளவு அமைப்பை, உருவாக்கி வருகிறது கிழக்காசிய நாடான ஜப்பான்.
இரண்டாம் உலகப் போரில் அடைந்த தோல்விக்குப் பின், ஜப்பான் இராணுவ ரீதியாகவும், உளவு ரீதியாகவும் பல கட்டுப்பாடுகளை தனக்குத்தானே விதித்துக் கொண்டது. அங்கு இராணுவ அமைச்சகம், வெளியுறவுத்துறை, காவல்துறை என ஆளாளுக்கு தனித்தனியாக தகவல்களைச் சேகரித்து வந்தனர்.
அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.,’ அல்லது பிரிட்டனின் ‘எம்.ஐ., -6’ போன்ற ஒருங்கிணைந்த வலுவான உளவு அமைப்பு ஜப்பானில் இல்லை. இதனால் வெளிநாட்டு உளவாளிகள் எளிதாக ஊடுருவும் நாடாக ஜப்பான் மாறிவிட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பிரதமர் சனா தகாய்ச்சி தலைமையிலான அரசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் புதிய உளவு அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
