இரத்தினபுரி மாவட்டத்தின் கல்தொட்ட மற்றும் வெலிகேபொல பிரிவுகளில் வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல், அண்மையில் (14) பலங்கொடை சமனலவெவ நீர்மின் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இங்கு பிரதேச மக்கள் தங்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்ததுடன், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இத்தாகலயாய காணிப் பிரச்சினை, யானை வேலி அமைத்தல், அரச காணி எல்லைப் பிரச்சினைகள் மற்றும் வேவெல்கந்துருஆர கட்டுமானத்திற்கான அனுமதி குறித்து ஆராயப்பட்டது.
மேலும், லுனுமெடில்ல நீர்வீழ்ச்சி வளாகத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக மேம்படுத்தும் போது, சூழல் மற்றும் பல்லுயிர்த்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பது குறித்தும், வெலிமடை அணைக்கட்டை புனரமைப்பதன் மூலம் கிராமங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுத்து, உயிர் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் புல் தேவைகளுக்கான தடைகளை நீக்குதல் மற்றும் விவசாயம், கால்நடைத் துறைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத் தடைகளை அகற்றுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.சி. பாலக்கும்புர, செயல்பாட்டுப் பணிப்பாளர் யு.எல். தௌபீக் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
