நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், கட்டுவ ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கவனக்குறைவாகக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் எனக் கூறப்படுகின்ற போதிலும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
