குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில், தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 , 6 ஆம் திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரோஹந்த அபேசூரிய முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பூஜ்ய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட எட்டுத் தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, இடைக்கால மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஓகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
