அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேகாலை, தெடிகம பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களிடம் விசாரணைகளின் போது அழுத்தம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சமீப காலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், அரசை விமர்சித்த சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், விசாரணைகளின் போது மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் விமர்சகர்களை அச்சுறுத்தும் போக்கில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி நடவடிக்கைகள், அரச ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அவர் விமர்சித்தார்.
