வடக்கு மாகாண மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஒரு ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டை (Sea Cucumber) வளர்ப்பு திட்டத்தை மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த நிகழ்வில், 120 பயனாளிகளுக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டன.
கைட்ஸ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்படி, தலா 6 உறுப்பினர்களைக் கொண்ட 20 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆரம்ப கட்ட இட அனுமதிக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவர்கள் கட்டாய நீரியல் முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தைப் பெற்று வர்த்தக ரீதியான கடல் அட்டை வளர்ப்பை முன்னெடுக்க முடியும்.
கடல் அட்டை வளர்ப்பு கடலோர சமூகங்களுக்கு நிலையான மற்றும் அதிக பெறுமதியான வாழ்வாதாரமாக அமையும் என தெரிவித்த அமைச்சர், இது இலங்கையின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என குறிப்பிட்டார்.
மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாடு முழுவதும் சமூக அடிப்படையிலான நீர்வாழ் உயிரின வளர்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
