தற்போது மேல் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையின் மொத்த படுக்கை கொள்ளளவு 544 ஆகவும், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 739 ஆகவும் உள்ளது.
ஹொரணை பிரதேசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள களுத்துறை, கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கி மையப்பகுதியில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை மூலம் சுமார் பத்து இலட்சம் பேருக்கு சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட பொது வைத்தியசாலை என்ற ரீதியில் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கு தேவையான வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்த வேண்டியதன் தேவையின் அடிப்படையில், குறித்த வைத்தியசாலையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் பொறுப்பேற்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டிருந்தது.
இதற்காக மேல் மாகாண ஆளுநரின் உடன்பாடு கிடைத்துள்ளதோடு, கடந்த ஜூன் 30 ஆம் திகதி இவ்வைத்தியசாலையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சிடம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
