இலங்கையில் பயணிகள் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் வினைத்திறனான, ஒருங்கிணைந்த மற்றும் பயனர்களுக்கு நேயமிக்க முறைமையாக மாற்றுவதற்காக, பல்நிலை போக்குவரத்து நிலையங்களை (Multimodal Transport Hubs) நிர்வகிப்பதற்கு 100% அரசுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட (பொது) கம்பனியொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேருந்துகள், புகையிரதம், வாடகை ஊர்திகள் மற்றும் ஏனைய போக்குவரத்து முறைகளுக்கிடையில் திறம்பட்ட பரிமாற்றங்களையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
மாகும்புற மற்றும் கடவத்த ஆகிய பல்நிலை போக்குவரத்து நிலையங்கள் தற்போது இயங்கி வருவதுடன், அனுராதபுரம் (தெற்கு) மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையங்களின் தொழிற்பாடு, நிர்வாகம், தரநிர்ணயப்படுத்துதல் மற்றும் வணிக அபிவிருத்தி போன்றவற்றை மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து அமைச்சின் கீழ் நிரந்தர நிறுவனக் கட்டமைப்பொன்றின் தேவை கண்டறியப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் 100% திறைசேரிக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட (பொது) கம்பனியாக இது நிறுவப்படவுள்ளது.
நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர் அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
