நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், நாட்டில் நிலவும் வழக்குத் தேக்கங்களைக் குறைத்து மக்களுக்கு விரைவான நீதியை வழங்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரே நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பொலிஸாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டிருப்பது நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாவட்ட மட்டங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை விசாரிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
நீதவான் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை சேவையாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதன் மூலம் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு மக்களுக்கு துரிதமான நீதி கிடைக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
