குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்சார விநியோகம் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, குறித்த நபர் கோபுரத்திலிருந்து கீழிறங்கியதுடன் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர், ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
