தெஹிவளை, கடவத்த வீதியில் அமைந்துள்ள தஹநாயக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்றிரவு வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இரவு 8.10 மணியளவில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவரே குறித்த தாக்குதலை நடத்த முயன்றுள்ளார் எனக் கூறினார்.
இருப்பினும், துப்பாக்கி இயங்காததால் உடனடியாகச் செயற்பட்ட வெதுப்பக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் போராடி துப்பாக்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி மற்றும் உந்துருளியை செலுத்தி வந்தவரைக் கைது செய்வதற்காக தெஹிவளை காவல்துறையினர் 2 விசேட காவல்துறை குழுக்களை நியமித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
