தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
