கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவானது 2021ஆம் ஆண்டு எவ்வித நேரடி முதலீடுகளையும் பெறவில்லை. 2022 முதல் 2026 (ஜூன்) வரையான காலப்பகுதியில் 407 மில்லியன் டொலர் என்ற அடிப்படையில் நேரடி முதலீடுகள் கிடைக்கப்பெற்றன. துறைமுக நகரில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு கண்டு, சிறந்த முகாமைத்துவத்துடன் உச்ச பயனை பெறுவதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற அமர்வின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொழும்பு துறைமுக நகரத்தில் முதன்மை குத்தகையின் கீழ் கொழும்பு துறைமுக நகர (தனியார்) நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 116.1 ஹெக்டேர் நிலத்தில், 129,853.25 சதுர மீட்டர் நிலம் இதுவரை அபிவிருத்தி நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது திட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஏறத்தாழ 11.2 சதவீதமாகும்.
சிலோன் ரியல் எஸ்டேட் ஹோல்டிங்ஸ் (தனியார்) லிமிடெட் (இலங்கை), கொழும்பு மெரினா டெவலப்மென்ட் (தனியார்) லிமிடெட் (இலங்கை), ஐசிசி போர்ட் சிட்டி (தனியார்) லிமிடெட் (இலங்கை), ஐஎஃப்சி கொழும்பு 1 (தனியார்) லிமிடெட் (சீனா), மெரினா ஹோட்டல் ஹோல்டிங்ஸ் (தனியார்) லிமிடெட் (இலங்கை), ஹோம் லேண்ட்ஸ் போர்ட் சிட்டி (தனியார்) லிமிடெட் (இலங்கை), பிரைம் மெல்வா போர்ட் சிட்டி (தனியார்) லிமிடெட் (இலங்கை) ஆகிய நிறுவனங்கள் துணை நிறுவனங்களாக காணப்படுகின்றன.
2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 6(1) (சி), (ஈ) பிரிவுகள் மற்றும் 38(அ), (ஈ) பிரிவுகளின் கீழ், கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகாரப் பகுதிக்குள் அமைந்துள்ள அரசாங்க சந்தைப்படுத்தக்கூடிய நிலங்கள் மற்றும் திட்ட நிறுவன சந்தைப்படுத்தக்கூடிய நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் வழங்கப்படும் குத்தகைகள் 99 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை.
துறைமுக நகரத்தில் கொழும்பு துறைமுக நகர நிறுவனம் நிலங்களை சந்தைப்படுத்தியதன் மூலம் அண்மைக்காலமாக வருமானத்தை ஈட்டியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவானது 2021ஆம் ஆண்டு எவ்வித நேரடி முதலீடுகளையும் பெறவில்லை. 2022ஆம் ஆண்டு 6 மில்லியன் டொலர், 2024ஆம் ஆண்டு 73 மில்லியன் டொலர், 2025ஆம் ஆண்டு 258 மில்லியன் டொலர் 2026ஆம் ஆண்டு (ஜூன்) 70 மில்லியன் டொலர் என்ற அடிப்படையில் நேரடி முதலீடுகள் கிடைக்கப்பெற்றன.
இலங்கை முதலீட்டு சபையானது 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 4270 மில்லியன் ரூபா அந்நிய நேரடி முதலீட்டையும், 2026ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் 302 மல்லியன் ரூபா முதலீட்டையும் பெற்றுக் கொண்டுள்ளது.
துறைமுக நகரத்தில் 6115 இலங்கை பணியாளர்களும், 3756 வெளிநாட்டு பணியாளர்களும், என்ற அடிப்படையில் மொத்தமாக 9,871 பேர் பணிபுரிகிறார்கள் என்றார்.
