உலகின் முக்கிய தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராகவும், சர்வதேசக் குற்றக்குழுவின் தலைவராகவும் கருதப்படும் டேனியல் கினஹான் துபாயிலிருந்து அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2015 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 6 வரையான காலப்பகுதியில் குற்றவியல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
49 வயதான கினஹானை ஏற்றிச் சென்ற அயர்லாந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தி டப்ளினை சென்றடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற 13 நிமிட விசாரணையைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல தொன் எடையிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சர்வதேச ரீதியில் கடத்தியமை, 12க்கும் மேற்பட்ட பாதாள உலகக் கொலைகளுடன் தொடர்புடையமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கினஹான் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க நிதித் திணைக்களம் டேனியல் கினஹான் தலைமையிலான குற்றக்குழுவை உலகின் மிகவும் ஆபத்தான குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாக வர்ணித்துள்ளது.
