கனடாவில் சிறுவன் ஒருவர் விமானத்தில் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் முழு விமானப் பயணமும் ரத்து செய்யப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த போர்ட்டர் எயார்லைன்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் புறப்படத் தயாரான நிலையில், சிறுவன் ஒருவர் தனது ஆசனத்தில் நிற்பதுடன், ஆசனப்பட்டியை அணியவும் மறுத்துள்ளார். அவரை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பாதுகாப்பு விதிமுறைகளின்படி இவ்வாறான நிலையில் விமானத்தை இயக்க முடியாத காரணத்தால், விமானத்தை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று சிறுவனையும் அவரது பெற்றோரையும் விமானத்திலிருந்து இறக்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், ஏற்பட்ட தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பின்னர் ஓடுபாதை மூடப்பட்டதால், விமானத்தை அன்றைய தினம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏனைய பயணிகள் மறுநாளுக்கான வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் விமானப் பயணங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
சிறுவனின் நடத்தைக்காக முழு விமானப் பயணத்தையும் ரத்து செய்திருக்க வேண்டுமா அல்லது அந்தக் குடும்பத்தை மட்டும் விமானத்திலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டுமா என்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
