குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது உயிரிழந்த இரு கைதிகளின் மரணத்திற்கும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட கடுமையான காயங்களே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், ஒரு கைதி தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், மற்றைய கைதி மார்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அமைதியின்மையில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படை, கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு முன்னரும் நீர்கொழும்பு, மகர, புதிய மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளில் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
