வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியை பலவந்தமான முறையில் கைப்பற்றவோ அல்லது சட்டவிரோதமான முறையில் குடியிருக்கவோ எவருக்கும் அனுமதியளிக்க முடியாது. சட்டவிரோதமான கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வீட்டு மற்றும் காணி உரித்து பத்திரங்களில் பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை அறிவோம். தமது வீட்டுக்கான உரித்து பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அதிகார சபை ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வீடமைப்பு அதிகார சபை ஊடாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை விநியோகிப்பதிலும் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இவை முறையான தரப்பிருக்கு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுகிறது.அது தொடர்பில் பல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
வீடமைப்பு அதிகார சபைக்கு தற்போது 300 உறுதிப்பத்திரங்களுக்கு கையொப்பமிடுவற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 300 உறுதிப்பத்திரங்களையும் மீள் பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். எதிர்வரும் ஆண்டுக்குள் 25 ஆயிரம் வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியை பலவந்தமான முறையில் கைப்பற்றவோ அல்லது சட்டவிரோதமான முறையில் குடியிருக்கவோ எவருக்கும் அனுமதியளிக்க முடியாது. சட்டவிரோதமான கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
