நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அதிக வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை, இன்று திங்கட்கிழமை (24) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், அதிக வெப்பமான வானிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
