நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், மனிதாபிமான மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கும், தனது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமைப் பிணைப்புகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தினார். இந்த நிதியுதவியானது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேற்று காலை (27 ) வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் நேபாள வெளிநாட்டு அமைச்சர் ஷிசிர் கானலுடன் தொலைபேசியில் உரையாடியபோது, நேபாளத்திற்கு இலங்கையின் இரங்கலையும், உறுதியான ஆதரவையும், வழங்கும் என வலியுறுத்தினார்.
இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கை பங்களிக்கக்கூடிய பொருத்தமான வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
