உலகில் சிங்களவர்கள் எனப்படும் ஒரேயொரு வரலாற்றுச் சிறப்புமிக்க இனம் இலங்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் என பெங்கமுவே நாலக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ‘அநாகரிக தர்மபால பரம்பரை’ அமைப்பின் சிறப்பு மாநாட்டிலும், நியமனச் சான்றீட்டுப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நமது நாட்டின் வரலாற்றில் ஒரு காலகட்டத்தையும் அதன் எதிர்காலத்தையும் வளப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல யுக புருஷர்கள் உருவாகியுள்ளனர்.
உலகில் சிங்களவர்கள் எனப்படும் ஒரேயொரு வரலாற்றுச் சிறப்புமிக்க இனம் இலங்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
நமது நாட்டின் முதலாவது யுக புருஷராக மிஹிந்து மகாரஹத்தன் வஹான்சே திகழ்கின்றார். அவர்களின் உன்னதமான வழிகாட்டலினாலேயே இந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய இனமும் மாபெரும் கலாச்சாரமும் உருவாகின.
தேவநம்பியதீச மன்னனிடம் நாட்டின் பாதுகாப்பாளராகவே செயற்பட வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரையைப் பின்பற்றியதாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுர இராச்சியமும் சிங்கள அரச வம்சமும் நிலைத்து நிற்க முடிந்தது.
அதேபோன்று தற்போதைய வரலாற்றில் மொஹொட்டிவத்தே குணானந்த தேரர் மற்றும் ஸ்ரீமத் அநாகரிக தர்மபால ஆகிய இரு யுக புருஷர்களை நினைவுகூர வேண்டும்.
குணானந்த தேரரின் சொற்பொழிவுகளைச் செவிமடுத்ததன் மூலமே அநாகரிக தர்மபால பௌத்த மதத்தின் சாரத்தையும் தேசத்தின் அவசியத்தையும் புரிந்துகொண்டார். அந்நிய மத ஆதிக்கங்களுக்கு எதிராக குணானந்த தேரர் ஆற்றிய அரும்பணி இல்லையென்றால் சிங்கள பௌத்தர்களாகிய நாம் இன்று நிமிர்ந்து வாழ முடியாதுபோயிருக்கும்.
அநாகரிக தர்மபால ‘சிங்களவர்களே விழித்தெழுங்கள்! புத்திகயாவை மீட்போம்!’ என்ற முதன்மை முழக்கத்துடன் செயற்பட்டதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளிலும் வழிகாட்டினார்.
ஆனால், நமது நாட்டின் தலைவர்களோ அல்லது பொதுமக்களோ அந்த வழிகாட்டலை முழுமையாகப் பின்பற்றாததால் 600 ஆண்டுகால மேல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து நம்மால் முழுமையாக மீள முடியாமல் போனது.
தற்போது அநாகரிக தர்மபால பரம்பரை அமைப்பின் மூலம் பேராசிரியர் இந்துராகாரே தம்மாஸர தேரர் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
எனினும், அரசியல்வாதிகளும் அந்நிய சக்திகளும் இத்தகைய தேசிய விழிப்புணர்ச்சிக்கு இடமளிப்பதில்லை. இந்த மாபெரும் தடைகளைத் தகர்த்து அநாகரிக தர்மபாலவின் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டுமாயின் தற்போதைய காலகட்டத்திலும் மற்றொரு அநாகரிக தர்மபால போன்ற ஆளுமை உருவாக வேண்டும்.
இன்றைய நிகழ்வில் நியமனச் சான்றீட்டுப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட அமைப்பின் பொறுப்பாளர்கள் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே அநாகரிக தர்மபால கண்ட கனவை நனவாக்க முடியும் என்றார்.
