முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இலட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் திடீரெனச் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதுடன், நிலவும் காலநிலை மாற்றங்களே இதற்கு முதன்மைக்காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மாத்தளன் சிறுகடல் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை மற்றும் காரல் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே இவ்வாறு பெருமளவில் இறந்து கரையொதுங்கியுள்ளன.
தற்போது நிலவிவரும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இத் திடீர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதைப் பார்வையிடுவதற்காகப் பெருந்திரளான மக்கள் அப்பகுதிக்குச் சென்று வருவதுடன், சிலர் கரையொதுங்கிய மீன்களை அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
