நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகளை முறையாக முன்னெடுத்து, பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, நுவரெலியா பிரதேச போக்குவரத்து பொலிஸார் மற்றும் மத்திய மாகாண சாலைப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து, நேற்று (07) பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.
பேருந்துகள் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே முறையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் முறையான வரிசையைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள், தடை செய்யப்பட்ட ஒலியெழுப்பிகள் மற்றும் அதிக சத்தம் ஏற்படுத்தும் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
