இந்துமத அதி உயர்பீடமொன்றை இந்துமாமன்றம் நியமிக்கவுள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்து மாமன்றத்தின் தலைவர் அ. கயிலாசபிள்ளை மற்றும் பொதுச்செயலாளர் வே. கந்தசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலக அளவிலும் நம் தேசம் முழுவதிலுமாகப் பரவிப் புகழ்பெற்றிருக்கும் நமது இந்துமதம், இலங்கையின் முக்கிய மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மதத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காகவென, 1960 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் எமது ‘அகில இலங்கை இந்துமாமன்றம்’ ஆகும். இம்மன்றமே இலங்கையின் சைவ சமயம் சார்ந்த அனைத்து விடயங்களையும் முன் நின்று நடத்திவருகிறது.
பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் என பல மதத்தவர்களும் இணைந்து வாழும் இந்த இலங்கை நாட்டில், மற்றைய மதங்களை வழிநடத்தவென அந்தந்த மதத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்களைப் போல, இந்துமதத்தை வழிநடத்தவென ஓர் தலைவர் இல்லை என்கின்ற குறைபாடு அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
நமது இந்துமதம் என்றைக்குமே ஒரு தனித்தலைவரை, மதத்தின் தலைவராய்க் கொண்டு இயங்கியதில்லை உயர்ந்த முனிவர்களும் ஞானியர்களும் உண்மை அடியார்களுமே காலத்திற்குக் காலம் தோன்றி நம் இந்துமத்தை நெறிசெய்து வந்துள்ளனர்.
நம் இந்துமதம் இறைவனைத் தலைவனாகக் கொண்டே இதுவரை சிறப்புற இயங்கி வந்திருக்கிறது மற்றைய மதங்களைப் போல, தனி ஒருவரை மதத்தின் தலைவராக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்துதான், நம் இந்துமதத்தவர் அக்காரியத்தைச் செய்யத் துணியவில்லை.
அங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படும் தனித்தலைவர் சிலவேளை தவறான ஒருவராய் அமைந்துவிட்டால், அதனால் இந்துமதத்தின் பாரம்பரியமும் சிறப்பும் பெருமையும் சிதைவுறும் எனக்கருதியே, தனி ஒருவரை மதத்தலைவராக்கும் முயற்சியை நம் சான்றோர்கள் தவிர்த்து வந்தனர்.
ஆனாலும், தற்போதைய உலக நிலையிலும் நம்நாட்டு அரசநிலையிலும் இலங்கை வாழ் இந்துமக்களையும் இந்துமதத்தையும் யார் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஓர் நியாயமான கேள்வி எழுந்திருப்பது சரியானதே. இங்ஙனம் நம் மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர் எவர் என்று தெரியாத காரணத்தால், இன்று நடைபெறும் அரசின் மதம் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களிலும், அரச வைபவங்களிலும் தகுதியற்ற பலர் இந்துமதத்தின் பிரதிநிதிகளாக அமர்த்தப்படுகின்றனர். அக்குறைபாட்டை நீக்குவதற்காக, எமது ‘அகில இலங்கை இந்துமாமன்றம்’, இலங்கை வாழ் இந்துமக்களின் அதி உயர் நிர்வாகப் பீடம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
துறவியர்கள், அந்தணர்கள், அறிஞர்கள், தர்மகர்த்தாக்கள், பிரமுகர்கள், பிரச்சாரகர்கள், புலம்பெயர் இந்துமத அமைப்பு என பலதரப்பட்டோரைக் கொண்டு படிமுறையில் அவ் அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம். இவ் அமைப்பு, இலங்கைக்குள்ளோ, உலக அளவிலோ இந்துமதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தவேண்டிய அல்லது இந்துமதப் பிரச்சினைகளைக் கையாளவேண்டிய தேவை ஏற்படுகிறபொழுது, அது சம்பந்தமான முடிவுகளை எடுத்து சமூகத்திற்கு அதனை அறிவிக்கவுள்ளது.
