குருநாகல் பகுதியில் பாடசாலை ஒன்றில் 8 வயது மாணவன் ஒருவர் காரொன்றுக்கு தீ வைத்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் எந்தவித உறுதியான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருநாகல் பாடசாலை வளாகத்தில் சுமார் 1.4 கோடி ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த வாகனத்திற்கு தீ வைத்தவர் என 8 வயது மாணவன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் என்பதும், சம்பவ நேரத்தில் அவர் வாகனத்திற்கு அருகில் நடந்து சென்றிருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், சிறுவனே வாகனத்திற்கு தீ வைத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சிகள் அல்லது விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மேலும், தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
