ஊழியர் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையத்தை, மாற்று நிலைய அதிகாரியை நியமித்து மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனவிலுந்தாவ துணை நிலையத்தில் பணியாற்றிய பிரதி நிலைய அதிகாரி பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை குறித்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஊழியர் பற்றாக்குறை காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்குரல மற்றும் அந்தடோலா ஆகிய துணை ரயில் நிலையங்களையும், மாற்று நிலைய அதிகாரிகளை நியமித்து மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடமாக உள்ள 25 துணை நிலைய அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு 2025 ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த போதிலும், இதுவரை அந்த செயற்பாடுகள் நிறைவடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
