இலங்கையில் SLS தரச்சான்றிதழ் இன்றி உள்ளூர் தயாரிப்பு சுகாதாரத் துவாய்களை (Sanitary Napkins) உற்பத்தி செய்தல், பொதியிடுதல், விநியோகித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன 2026 அக்டோபர் 8 ஆம் திகதி முதல் முழுமையாக தடை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சுகாதாரத் துவாய்கள் (SLS 1732) மற்றும் மெல்லிய சுகாதாரத் துவாய்கள் (SLS 1748) ஆகியவற்றுக்கு இந்த விதிமுறை பிரதானமாகப் பொருந்தும்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்களும் SLS நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படாவிடின், அவற்றை இறக்குமதி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்கால தர நிர்ணய திருத்தங்களுக்கும் இவ்வுத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
