வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவரை கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு பள்ளியவத்தை பகுதியிலுள்ள விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் புகுந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த குடு ரொஷான் என்பவரை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் குறி தவறிய துப்பாக்கிச்சூடு அருகில் நின்றிருந்த நபர் மீது பாய்ந்து அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
