நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நீர்கொழும்பு – தொடுவாவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன், அதிலிருந்து மேலும் ஒருவர் வேறொரு படகினால் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதேவேளை, சிலாபம் – தொடுவாவ பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி பிற்பகல் கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளான படகிலிருந்து காணாமல் போன இரு கடற்றொழிலாளர்களில் ஒருவரது சடலம் நேற்று (2) கொள்ளுப்பிட்டிப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
அத்துடன், குறித்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மற்றைய கடற்றொழிலாளர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
