கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உட்புற விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த மைதானத்தை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கு காரணமாக நிர்மாணப் பணிகள் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மக்களே எனவும், குறிப்பாக இளம் விளையாட்டு வீரர்களின் கனவுகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
“அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம்” என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
